மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று (பிப்.13) சந்தித்துப் பேசினார்.
திரு.கமல் ஹாசன் அவர்களின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சமூகம், கலை, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி திரு.கமல் ஹாசன் சார் அவர்களை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். அன்போடு வரவேற்று, அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, மநீம தலைவர் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது. அன்புத் தம்பியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அன்பிற்கும், பண்பிற்கும் என் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
in அறிக்கைகள்